அங் மோ கியோ அவென்யூ 6ன் புளோக் 123ல் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கும் சமூகத் தோட்டம், மூத்த குடியிருப்பாளர்கள் தங்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்ள உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கிறது.
சக்கர நாற்காலிகளில் இருப்போருக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டம் எனும் இந்த முயற்சி ஆசியப் பெண்கள் நலச் சங்கத்தால் தொடங்கப்பட்டது. இதில் மூத்தோர் தோட்டக்கலையில் ஈடுபட ஓர் இடம் ஒதுக்கப்படும்.
தோட்டத்தில் வளரும் மூலிகைகளின் நறுமணம் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டோரின் நினைவுகளைக் கிளறிவிடக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. செடிகளுடன் தொடர்புகொள்வதும் அவர்களுக்கு நன்மையளிக்கும்.
இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இப் ஹோன் வெங் நேற்று காலை இந்தத் தோட்டத்தைத் திறந்துவைத்தார்.
சில முதியோருடன் இணைந்து மிளகாய்ச் செடிகளையும் அவர் நட்டுவைத்தார்.
மூத்தோரும் உடற்குறையுள்ளோரும் இந்தத் தோட்டத்தில் சுகாதார மேம்பாட்டு வாரியம் நடத்தும் வாராந்தர உடற்பயிற்சி நடவடிக்கையிலும் ஈடுபட முடியும்.
தேசியப் பூங்காக் கழகம் ஏற்பாடு செய்யும் தோட்டக்கலைப் பயிலரங்குகளிலும் விழாக் காலக் கொண்டாட்டங்களிலும் அவர்கள் பங்குபெறலாம்.
ஆசியப் பெண்கள் நலச் சங்கத்தின் மூத்தோர் சமூகப் பிரிவு நிர்வகிக்கும் இந்தத் தோட்டத்திற்கு கேபிட்டலாண்ட் ஹோப் அறநிறுவனம் உள்ளிட்ட சில அமைப்புகள் நன்கொடை மூலம் ஆதரவு வழங்குகின்றன.
சமூகத் தோட்டம் போன்ற பொது இடங்கள், மூத்தோருக்கும் உடற்குறையுள்ளோருக்கும் சமூகத்துடன் கலந்துறவாடும் வாய்ப்பை வழங்குகின்றன என்றும், அவர்கள் தங்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்ளவும், சிறப்பான முறையில் முதுமையடையவும் கைகொடுப்பதாகவும் ஆசியப் பெண்கள் நலச் சங்கம் குறிப்பிட்டது.