நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துவருவதாக தேசிய சிறுநீரக அறநிறுவனம் தெரிவித்தது.
இந்தப் போக்கு அக்கறைக் குரியது என அறநிறுவனம் சொன்னது.
மூன்று மாதங்களுக்கு மேலாக ஒருவருக்கு சிறுநீரக நோய் இருந்தால், அவர் நாட்பட்ட சிறுநீரக நோயாளி என கருதப்படுவார்.
சிங்கப்பூரில் நாட்பட்ட சிறு
நீரக நோய்க்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை
முக்கிய காரணங்கள் எனக் கூறப்பட்டது.
இந்த இரண்டுமே சிங்கப்
பூரர்களிடையே பரவலாக இருப்பதால், மூன்றில் இருவருக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அறநிறுவனத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பேஹரம் அலி கான் விவரித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிறுவனம் தெரிவித்தது.
சிகிச்சை பெற மாதந்தோறும் 100க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைப்பதாக அறநிறுவனம் கூறியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 60ஆக இருந்தது.
மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய பல்
கலைக்கழக மருத்துவமனை சிறுநீரகவியல் பிரிவின் தலைவர் துணைப் பேராசிரியர் ஜிம்மி டியோ குறிப்பிட்டார்.
நாட்பட்ட சிறுநீரக நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வது அவசியம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகைபிடிப்பதை நிறுத்துவது போன்ற மாற்றங்கள் மூலம் சிறுநீரக நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
அதோடு, அவ்வப்போது சுகாதாரப் பரிசோதனைகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.