தம்பி உடையவர்கள் படைக்குக்கூட அஞ்சத் தேவையில்லை என்று கூறுவதுண்டு.
அடுத்த மாதம் உலகத் தரைப்பந்துப் (floorball) போட்டியில் கலந்துகொள்ளும் சிங்கப்பூர் அணியின் தலைவர் ஆர் சூர்யாவுக்கு இது சரியாகப் பொருந்தும்.
தரைப்பந்து அணியில் இவரது தம்பி ஆர் சதீஷும் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் அந்த அணியில் இடம்பிடித்துள்ள சகோதரர்கள் இவர்கள் மட்டுமல்ல. இருபத்து ஐந்து வயது இரட்டையரான விக்னேசா பசுபதி, குமரேசா பசுபதியும் சிங்கப்பூர் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
உலகத் தரைப்பந்து வெற்றியாளர் கிண்ணத்துக்குச் செல்லும் அணியில் இரண்டு வெவ்வேறு அண்ணன் தம்பிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று சிங்கப்பூர் தரைப்பந்துச் சங்கம் கூறியுள்ளது.
உலகத் தரைப்பந்து போட்டி இம்முறை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி நகரில் டிசம்பர் 3ஆம் முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 16 அணிகள் இதில் பங்குபெறுகின்றன.
இயந்திரத் துறைப் பொறியாளரான சூர்யா, 29, சிங்கப்பூர் அணியின் தலைவராகக் கலந்துகொள்ளும் முதல் அனைத்துலகப் போட்டி இது. சகோதரர்கள் ஒன்றாக உலகப் போட்டிகளில் விளையாடுவது அரிது என்பதால், தம்பி தமக்குப் பக்கபலமாக ஆடவிருப்பதை நினைத்து மகிழ்வதாக அவர் கூறினார்.
ஆய்வுப் பொறியாளரான அவரது தம்பி சதீஷுக்கு, அண்ணனுடன் சேர்ந்து தேசிய அணிக்காக ஆடவேண்டும் என்ற கனவு பலித்திருக்கிறது.
"அண்ணன் சூர்யாதான் எனக்கு முன்னுதாரணம். அவரது ஆட்டத் திறனையும் அனுபவத்தையும் பெறுவதே தமது இலக்கு," என்றார் சதீஷ், 27.
உலகத் தரைப்பந்துப் போட்டியில் இவர் பங்குபெறுவது இதுவே முதல்முறையாகும்.
தம்பி குமரேசாதான் தமக்கான மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என்றார் விக்னேசா. அவரும் தம்பிக்குச் சளைத்தவரில்லை.
விக்னேசா, குமரேசா இருவரும் ஏற்கெனவே சென்ற 2016ஆம் ஆண்டு லாட்வியாவில் நடந்த உலகத் தரைப்பந்துப் போட்டியில் ஒன்றாகப் பங்கேடுத்துள்ளனர்.
ஆனால் 2018ஆம் ஆண்டுப் போட்டியில் குமரேசாவுக்குக் காலில் தசைநார் காயம் ஏற்பட்ட காரணத்தால் போட்டியை விட்டு விலகவேண்டிய சூழல்.
இருந்தாலும் அண்ணன் பயிற்சி செய்யும் காணொளியைப் பார்த்து விட்டு ஆட்டத்தில் திருத்தங்களைக் கூறுவார் குமரேசா.