சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரண்டு சிறப்பு அஞ்சல்தலைகள் நேற்று வெளியிடப்பட்டன. இவ்விரு நாடுகளும் தங்களுக்கிடையிலான அரசதந்திர உறவை 1970ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஏற்படுத்திக்கொண்டன. 50 ஆண்டு நிறைவு வரலாற்று நிகழ்வில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திரு தினேஷ் குணவர்தனாவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மெய்நிகர் வழி கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்வில் இரு அஞ்சல்தலைகள் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. 'கடல்துறை பாதுகாப்பு' எனும் கருப்பொருளில் உருவாக்கப்பட்ட இந்த அஞ்சல்தலைகள் இலங்கையில் உள்ள பவள சுற்றுச்சூழல் அமைப்பையும் சிங்கப்பூரின் சதுப்புநிலங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளன.
இந்த மெய்நிகர் நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், சிங்கப்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் திருமதி சஷிகலா பிரமவர்தனேவும் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் திரு எஸ். சந்திரதாஸும் சிறப்பு அஞ்சல்தலைகளை வெளியிட்டனர்.
இந்த வரலாற்று நிகழ்வின் தொடர்பில் இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்ட சிங்கப்பூர் அரசாங்கம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்போஸ்ட், இலங்கை அஞ்சல் துறை, சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துக் கொண்டது.