கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் போதும், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகைகள் மே மாதத்தில் தொடர்ந்து 11வது மாதமாகக் கூடியுள்ளன.
அத்துடன் கொண்டோமினியம் வீடுகளுக்கான வீட்டு வாடகை தொடர்ந்து 5வது மாதமாக அதிகரித்தது.
வீவக வீட்டு வாடகை ஏப்ரல் மாதம் இருந்ததைவிட மே மாதத்தில் 0.7% கூடியது. மேலும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கழக வீட்டு வாடகை 7.9% அதிகமானது.
கொண்டமினியம் வீடுகளில் வாடகை ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் கடந்த மாதம் 0.3% உயர்ந்தது. 2020 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கொண்டோ வாடகை 7.3% கூடியது.
எனினும், வீவக, கொண்டோமினியம் இரு வகை வீட்டு வாடகையும் 2013இல் கண்ட உச்சத்தை இன்னும் தொடவில்லை. அந்த அளவை விட அவை சுமார் 10 முதல் 12% குறைவாகவே உள்ளன.
மே மாதத்தில் வீவக வீட்டு வாடகையின் அதிகரிப்பு பரந்து பட்டதாக இருந்தது. எல்லா வகை அறை எண்ணிக்கை உள்ள வீட்டு வாடகையும் அதிகமானது.
மேலும், முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகள், புதிய பேட்டைகள் இரண்டிலும் வாடகை கூடியது. ஆனால் புதிய குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வாடகை 8.6% அளவில் சற்று வேகமாக உயர்ந்ததை ஹட்டன்ஸ் ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் சுட்டினார்.
ஒப்புநோக்க, முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் வீட்டு வாடகை 7.2% அதிகரித்தது.
புதிய பேட்டைகளில் வசதிகள் கூடியிருப்பதாகக் கருதி, அதிகமான வாடகைதாரர்கள் புதிய பேட்டைகளுக்குக் குடிபெயர்ந்திருக்கலாம் என்றார் அவர்.