முரசொலி
சிங்கப்பூர் பொருளியல் நிலவரங்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவுக்குத் திரும்பி இருக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக இறங்குமுகமாகவே இருந்து வந்த பொருளியல், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கொஞ்சம் தலை நிமிர்ந்து இருக்கிறது.
2021 ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட மூன்று மாத காலத்தில் பொருளியல் 0.2% வளர்ச்சி கண்டு இருக்கிறது என்பது வர்த்தக தொழில் அமைச்சின் முன்னோட்டக் கணக்கீடுகள் மூலம் தெரியவந்துஉள்ளது. இந்தக் கணக்கீடுகள், முதல் இரண்டு மாத நிலவரங்களின் அடிப்படையிலானவை என்றாலும் பொருளியல் ஏறுமுகமாகத் திரும்பி இருக்கிறது என்ற செய்தி காதில் தேனாக இனிக்கிறது.
இதுவரை இறங்கியே வந்த பொருளியல் அந்த நிலையில் இருந்து மாறி ஆக்ககரமாக ஏறத்தொடங்கி இருக்கிறது என்றாலும் மீட்சியைப் பார்க்கையில் இன்னும் எச்சரிக்கைக இருக்கவேண்டிய தேவை இருப்பதையே நிலவரங்கள் காட்டுகின்றன.
பல துறைகளிலும் மீட்சி ஏற்ற இறக்கமாக இருக்கிறது. ஒரு துறை வளர்கிறது, மறு துறை தேய்கிறது. அதாவது உற்பத்தித்துறை 7.5% வளர்ச்சி கண்டு இருப்பதாகத் தெரியவந்துள்ள நிலையில், கட்டுமானத்துறை -20.2% வீழ்ந்துவிட்டதாக நிலவரங்கள் காட்டுகின்றன. இது மலைக்கும் மடுவுக்கும் இடைப்பட்ட நிலையைப் போல் இருக்கிறது.
சேவைத் துறையும் நிமிர்ந்து வருகிறது. 2020 கடைசி மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இந்த ஆண்டில் இதுவரை அந்தத் துறை வளர்ந்தபாடில்லை, 1.2% இறக்கம் கண்ட நிலையில்தான் இருக்கிறது. என்றா லும் முன்பைவிட அது மேம்பட்டு இருக்கிறது.
சேவைத் துறைக்கு உள்ளேயும் ஏற்ற இறக்கம் இருப்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். தகவல்தொடர்பு, நிதி, நிபுணத்துவச் சேவைகள் 3.7% வளர்ந்து உள்ளன. ஆனால் இதர சேவைத் துறைகள் இன்னமும் படுத்தே கிடக்கின்றன.
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பல பொருளியல் வல்லுநர்கள் கணிப்பதைப் பார்த்தால், நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் ஏற்படக்கூடிய வளர்ச்சியைவிட, பின் வரும் மாதங்களில் இடம்பெறும் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படைபில் பார்த்தால் 2021 இரண்டாவது காலாண்டில்-அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட மூன்று மாதங்களில்- பொருளியல் வளர்ச்சி ஈரிலக்க அளவில் இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.
ஆகைல் வளர்ச்சி மிதமானதாக இருக்கும் என்றாலும் பொருளியல் தொடர்ந்து ஏறுமுகமாகவேதான் இருக்கும் என்ற முடிவுக்கு வருவதற்கு ஏற்ற நிலவரங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. சேவைத் துறை வளர்ச்சி பரந்த அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். சிங்கப்பூருக்கு வெளியே நிலவும் சூழ்நிலைகளைக் கவனித்தால் அவையும் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் நிதித்துறை விரிவடைகிறது. ஆசிய பசிபிக் வட்டாரம் அதிக வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டாரம் 2020ல் 1.5% இறங்கியது. அது இந்த ஆண்டில் 7.6% வளர்ச்சி காணும் என்று அனைத்துலக பண நிதியம் கணித்து இருப்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.
இவை காரணமாக சிங்கப்பூரின் பொருளியலுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று நம்பலாம்.
சிங்கப்பூர் நாணய ஆணையம்கூட தனது ஏப்ரல் மாதக் கொள்கை அறிக்கையில் இதையே குறிப்பிட்டு உள்ளது. சிங்கப்பூருக்கு வெளியே பொருளியல் தேவைகள் அதிகமாகும் போக்கு இருப்பதால் இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் சிங்கப்பூர் பொருளியல் சூடுபிடிக்கும்;
பொருளியல் முழு மூச்சில் செயல்படும் அளவுக்கு மேம்படாது என்றாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அரசாங்கம் கணித்துள்ள அளவைத் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக ஆணையம் முன்னுரைத்துள்ளது. பொருளியல் இந்த ஆண்டில் 4% முதல் 6% வரை வளர்ச்சி காணும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரபூர்வ கணிப்புகள் கூறுகின்றன.
தனிர் துறையைச் சேர்ந்த பொருளியல் வல்லு நர்கள் பலரும் இவ்வாறே சொல்கிறார்கள். எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் மார்ச் மாதம் 12.1% கூடி இருப்பதை அடுத்து இந்த ஆண்டுக்கான ஏற்றுமதிகள் அதிகமாக இருக்கும் என்று பகுப்பாய் வாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலவரங்கள் நம்பிக்கை தருபவை க, ஊக்கமளிப்பவைக உள்ளன. இருந்தாலும் எல்லாம் சரளமாக, எதிர்பார்க்கப்படுவதைப்போல நடக்கும் என்பதற்கான உத்தரவாதங்கள் எதுவும் இல்லை என்பதை கவனிக்கவேண்டும்.
உலக அளவில் நிச்சயமில்லாத பல பொருளியல் நிலவரங்கள் இருந்து வருவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் தனிர் துறை பொருளில் வல்லுநர்களும் எச்சரித்து இருக்கிறார்கள் என்பதை அலட்சியப்படுத்திவிட முடிது.
சிங்கப்பூர் அதிகமாக பொருளியல் தொடர்புகளைக் கொண்டுள்ள, வர்த்தகங்களில் ஈடுபடக்கூடிய நாடுகளில் பலவற்றில் கொவிட்-19 தொற்று மறுபடியும் தலை காட்டுகிறது; தடுப்பூசி பற்றாக்குறை வாய்ப்பும் இருக்கிறது; எல்லைகள் திறக்கப்படுவது தாமதமடையலாம்; புதிய வகை கிருமிகள் தலை தூக்கலாம்;
உலகளாவிய நிதி அமைப்புகள் செய்யும் காரியங்கள் மூலம் எதிர்பாராத பாதகச் சூழலும் ஏற்படலாம்; அமெரிக்காவில் பங்குச்சந்தை முறிகளில் எதிர்பார்க்கப்படுவதைவிட அதிக வருவாய் கிடைக்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அனைத்துலக பண நிதியம் எச்சரித்துள்ளது.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இருந்து முதலீடுகள் அமெரிக்கா பக்கம் திரும்ப ஊக்கம் கிடைக்கும். இந்த வட்டாரத்தில் வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் உத்தேசித்துதான் சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நாணய பரிவர்த்தனை விகிதக் கொள்கையில் மாற்றம் செய்மல் நிலவரங் களுக்கு ஏற்ப அதை வைத்துள்ளது.
கரணம் தப்பினால் மரணம் என்ற இப்போதைய உலகப் பொருளியல் சூழலில் மிகவும் எச்சரிக்கையுடன், விவேகத்துடன் மிகவும் நேர்த்தியாக காய்களை நகர்த்தவேண்டிய பொறுப்பு, முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக இருப்பதை எல்லாரும் உணர்ந்து கொண்டால் அது பொருளியலுக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும் என்பது திண்ணம்.