சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஏழாம் தலைமுறை அவசர மருத்துவ வாகனம்
தானாகவே தூய்மைப்படுத்திக்கொள்ளும் அமைப்பைக் கொண்ட புதிய வகை அவசர மருத்துவ வாகனம் இவ்வாண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. அவை எதிர்காலத் தொற்றுப் பரவல்களைத் துணை மருத்துவப் படையினரால் சிறந்த முறையில் கையாள வகைசெய்யும்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஏழாம் தலைமுறை அவசர மருத்துவ வாகனம் உட்பட பல புதுவகை வாகனங்கள், குடிமைத் தற்காப்புப் படையின் நேற்றைய பணித்திட்டக் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பல தீயணைப்பு நிலையங்களில் இருந்து மனிதவளமும் சாதனங்களும் தேவைப்படும் பெரும் தீச்சம்பவங்கள், விமான விபத்துகள் போன்ற நிகழ்வுகளின்போது நடமாடும் தளபத்திய சாவடிகளாகச் செயல்படும் வகையில் முன்னணி தளபத்திய வாகனம், தளபத்திய வாகனம் ஆகியவற்றின் புது மாதிரிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
குடிமைத் தற்காப்புப் படை, தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, எஸ்டி இன்ஜினியரிங் ஆகிய அமைப்புகளின் கூட்டுமுயற்சியில் புதுவகை தளபத்திய வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள எட்டு முன்னணி தளபத்திய வாகனங்களுக்கும் ஐந்து தளபத்திய வாகனங்களுக்கும் பதிலாக இவ்வாண்டு ஜூலை முதல் படிப்படியாக புதிய வாகனங்கள் செயல்பாட்டிற்கு வரும்.
துணை மருத்துவப் படையினர் 20 நிமிடங்களுக்குள் வாகனத்தைத் தூய்மைப்படுத்தும் வகையில், புதுவகை அவசர மருத்துவ வாகனத்தில் கிருமிநாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளது.
இப்போதைக்கு அவசர மருத்துவ வாகனங்களைத் தூய்மைப்படுத்த கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிறது. அதற்குப் புறச் சாதனமும் தேவைப்படுகிறது.
அத்துடன், ஏழாம் தலைமுறை அவசர மருத்துவ வாகனத்தில் சூரிய சக்தித் தகடு ஒன்றும் முக்கியச் சாதனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் விவேக மின்னூட்டி அமைப்பும் உள்ளன.
மேலும், தூக்குப் படுக்கைகளை ஏற்றி இறக்குவதை மின்னணு முறையில் கட்டுப்படுத்தும் வசதியையும் அவ்வாகனம் கொண்டுள்ளது. குடிமைத் தற்காப்புப் படையும் உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஏழாம் தலைமுறை அவசர மருத்துவ வாகனங்கள் நடப்பாண்டின் பிற்பகுதியில் இருந்து கட்டங்கட்டமாகப் பயன்பாட்டிற்கு வரும்.
தனது செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் குடிமைத் தற்காப்புப் படை சிறந்து விளங்கி வருகிறது என்று முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவின்மூலம் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கருத்தரங்கின்போது தெரிவித்தார்.
தீயணைப்பு முயற்சிகளின்போது ஆளில்லா தீயணைப்பு இயந்திரங்களையும் வானூர்திகளையும் குடிமைத் தற்காப்புப் படை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், பயிற்சி, கற்றலுக்காக கணிசமாக தொழில்நுட்பத்தில் அவ்வமைப்பு முதலீடு செய்து வருவதையும் சுட்டினார்.
ஜாலான் பகாரில் உள்ள குடிமைத் தற்காப்புப் பயிலகம் பேரளவில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அத்திட்டத்தின் முதற்கட்டம் இவ்வாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த மறுமேம்பாட்டுத் திட்டம் முடிவுற மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்றும் அப்பயிலகத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.