சைனா டவுன் வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் புத்தாண்டுச் சந்தைக்குப் பெரும் மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளும் போக்குவரத்து மாற்றங்களும் இருக்கும் எனச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வரை சைனா டவுனில் சந்தை செயல்படும்.
வெள்ளிக்கிழமை மாலை முதல் காவல்துறை, துணைக் காவல்துறை, பாதுகாப்பு அதிகாரிகள் அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சந்தைக்குச் செல்லும் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்ட பகுதிகள் அடைக்கப்படலாம் எனவும் காவல்துறை குறிப்பிட்டது.
பொதுமக்கள் பொறுமையாக இருக்கும்படியும் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் காவல்துறை அறிவுறுத்தியது.
நெரிசலான அல்லது அடைக்கப்பட்ட பகுதிகளுக்குள் வலுக்கட்டாயமாக பொதுமக்கள் செல்ல முயற்சிக்கக்கூடாது என்றும் அது கூறியது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்கள் உடைமைகளைக் கவனமாக பார்த்துகொள்ளும்படி பொதுமக்களைக் காவல்துறை அறிவுறுத்தியது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது செயல்பாடுகள் குறித்து தெரிவிக்க 1800-2626-473 என்ற எண்ணில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை அழைக்கலாம் அல்லது காவல்துறையை 999 என்ற எண்ணில் அழைக்கலாம்.
71999 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையத் தளத்திலும் தகவலைச் சமர்ப்பிக்கலாம்.