கம்போடியத் தலைநகர் நோம் பென்னிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் உள்ள பயணிகளிடம் இருந்து திருட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சீன நாட்டவர் ஒருவர் சிங்கப்பூரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
யி ஹுவாய்சுன், 44, என்ற அந்த ஆடவர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவர் டிசம்பர் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
முதன் முதலில் டிசம்பர் 16ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட அவர், அப்போதிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நோம் பென்னிலிருந்து டிசம்பர் 15ஆம் தேதி காலை புறப்பட்ட கம்போடிய ஏர்வேஸ் கேஆர்751 ரக விமானத்தில் இருந்தபோது, மூன்று பயணிகளிடம் இருந்து திருட முயன்றதாக யி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காலை 9.40 மணிவாக்கில் ஆடவர் ஒருவரின் கறுப்புப் பையில் இருந்து திருட முயன்றதாகவும், சில நிமிடங்களுக்குப் பிறகு மற்றொருவரின் கறுப்புப் பையில் இருந்து மீண்டும் திருட முயற்சி செய்ததாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மூன்றாவது நபரின் பையில் இருந்து திருட முயன்றதாக யி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், யி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அவர் மீண்டும் அடுத்த மாதம் விசாரணைக்கு முந்திய கலந்துரையாடலுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
திருட முயற்சி செய்ததற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூவாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.