சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.
முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி அன்று மாலை 6.20 மணிக்குத் தீவு முழுவதும் அது ஒலி எழுப்பப்படும் எனச் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் படை தெரிவித்தது.
பொது எச்சரிக்கை முறையின்கீழ் அந்த ஒலி ஒரு நிமிடத்துக்கு எழுப்பப்படும். அதைக் கேட்டுப் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று படை கூறியது.
சமிக்ஞை ஒலியைக் கேட்டவுடன் உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளிபரப்பப்படும் தகவலைக் கேட்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“சிங்கப்பூரையும் நமது எதிர்காலத்தையும் பாதுகாக்க நாம் உறுதியுடன் நின்று நமது கடமையைச் செய்ய வேண்டும் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டவே இந்த ஒலி எழுப்பப்படுகிறது,” எனப் படை தெரிவித்தது.
‘எஸ்ஜிசெக்யூர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள கைத்தொலைபேசிகளிலும் அந்தச் சமிக்ஞை ஒலியைக் கேட்க இயலும்.
பொது எச்சரிக்கை முறை குறித்த மேல்விவரங்களுக்கு go.gov.sg/pws என்ற இணைய முகவரியை நாடலாம்.