உலக எரிசக்தி நெருக்கடியின்போது, மிகக் கடுமையான சூழ்நிலைகளில் கடைசித் தீர்வாக மின்சார சில்லறை விற்பனையாளர்களும் பயனீட்டாளர்களும் “நீடித்த காலகட்டத்திற்கு” எரிசக்திப் பங்கீட்டு முறையைக் கடைப்பிடிக்கவைக்கும் அதிகாரம் எரிசக்திச் சந்தை ஆணையத்திற்கு (இஎம்ஏ) வழங்கப்படலாம்.
மின்சார, எரிவாயுச் சட்டத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்று அது.
சிங்கப்பூரின் எரிசக்தி சூழல் கணிசமான அளவு மாறும் என்று வர்த்தக, தொழில் அமைச்சும், எரிசக்திச் சந்தை ஆணையமும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
வர்த்தக, தொழில் அமைச்சும், ஆணையமும் மே 8ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதிவரை பொதுமக்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து கருத்துகளை நாடுகின்றன.
உலக எரிவாயு விநியோகத் தடைகள், சிங்கப்பூரின் மின்சார விநியோகத்திற்கு ஏற்படுத்தக்கூடிய இடையூறுகளை 2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட உலக எரிசக்தி நெருக்கடி கோடிகாட்டியிருக்கும் நிலையில், அண்மைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆணையம் கூறியது.
சிங்கப்பூரின் மின்சாரத்தில் ஏறக்குறைய 95 விழுக்காடு, எரிவாயுவிலிருந்து வருகிறது.
2021ஆம் ஆண்டில், அதிகரித்துவந்த மின்சார விலை ஆறு விற்பனை நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறின.
“அப்போது சிங்கப்பூர் விநியோகத் தடைகளைத் தவிர்த்தபோதும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய அவசரச் சூழல்களுக்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்,” என்று ஆணையம் கூறியது.
ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற மற்ற நாடுகளிலும் இதுபோன்ற முறைகள் செயல்பாட்டில் இருப்பதை ஆணையம் சுட்டியது.
இதன் தொடர்பில் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் ஜூன் 5ஆம் தேதிக்குள் EnergyLegislation@mti.gov.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது வர்த்தக, தொழில் அமைச்சுக்கு நேரடியாக அஞ்சல் அனுப்பலாம்.