சிங்கப்பூரில் இருந்து வெளிநாட்டுக்கு உயிருள்ள மரப்பல்லியை ஒரு பெட்டியில் வைத்து கடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முயற்சி செய்யப்பட்டது.
அதைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் முறியடித்தது.
அந்தப் பெட்டியைச் சோதனை செய்தபோது சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாகவும் அதைப் பிரித்துப் பார்த்தபோது அதனுள்ளே உயிருள்ள மரப்பல்லி இருந்ததாகவும் ஆணையம் செவ்வாய்கிழமை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இதுபற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு தேசிய பூங்காக் கழகத்திடம் தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஊர்வன இனத்தைச் சேர்ந்த இந்த உயிரினம் கழகத்தின் வனவிலங்கு மறுவாழ்வு நிலையத்தின் பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உடலில் சிறுத்தைபோல புள்ளிகள் கொண்ட இந்த மரபல்லியை ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், வடமேற்கு இந்தியா, நேப்பாளம் போன்ற வறண்ட, பாலைவனப் பகுதிகளில் பார்க்க முடியும்.
இந்த உயிரினம், அழிந்துவரும் உயிரினப் பட்டியலில் இல்லையென்றாலும் வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரவோ அவற்றை வாங்கவோ செல்லப்பிராணிகளாக வளர்க்கவோ கூடாது என பொதுமக்களுக்கு ஆணையம் நினைவூட்டியது.