கேலாங் வட்டாரத்தில் உள்ள கடைவீடு ஒன்றில் திங்கட்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில், மூன்று மாடிகளைக் கொண்ட கடைவீட்டின் மேற்கூரையிலிருந்து கரும்புகை வெளியானதைக் காண முடிந்தது.
இந்தச் தீச்சம்பவம் குறித்து காலை 7.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்தக் கடைவீட்டின் மூன்றாவது மாடியில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது எனவும் தீ மளமளவெனப் பரவி மேற்கூரை வழியாக அருகில் இருந்த வீடுகளுக்குப் பரவியது எனவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் 30 குடியிருப்பாளர்களைக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் வெளியேற்றின.
தீயை அணைக்கும் பணியில் 12 அவசர உதவி வாகனங்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் நான்கு வாகனங்களுடன் 50 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. மேலும், இந்தத் தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.