ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி, மாலை 2 முதல் 6 மணி வரை புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம் தமிழ்மொழி விழா நிகழ்ச்சியாக பாடல், மாறுவேடப் போட்டிகளைச் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்தது.
புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் சிறுவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனாக வேடமிட்டு வீர வசனங்களைப் பேசிய ஜெமின் தொடக்கப்பள்ளியைச் சார்ந்த அனன்யா சதீஷ், 9, தொடக்கநிலை 1 முதல் 3 பிரிவில் வென்றார். “உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?” என உணர்ச்சி பொங்க கேட்டார்.
பாரதியாராக வேடமிட்டு பாரதியின் சரித்திரத்தைப் படைத்த பீக்கன் பள்ளி மாணவர் செந்தில்குமார் ஸ்ரதேஷ், 11, தொடக்கநிலை 4 முதல் 6 பிரிவில் வென்றார்.
இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றார் கண்ணகியாக பாண்டிய அரசனிடம் ஆவேச முழக்கமிட்ட அங் மோ கியோ தொடக்கப்பள்ளி மாணவி இளமாறன் யாழினி, 12.
“பிள்ளைகளின் நடிப்பார்வத்தைப் பாராட்டவேண்டும். தமிழில் நன்றாக பேசி நடித்தார்கள். இந்நிகழ்ச்சி தமிழை வளர்த்தது,” என்றார் மாறுவேடப் போட்டிகளுக்கான நடுவர் அதிபதி அனைத்துலக நாடக நிறுவனர் நவின்நேசன்.
பாடல் போட்டிகளில் தொடக்கநிலை 1 முதல் 3 பிரிவில் பீக்கன் தொடக்கப்பள்ளியின் தமிழ்வானன் ஷான்வி, 7, முதல் பரிசை வென்றார். ‘நாட்டின் எதிர்காலமே சிறுவர்களை நம்பியுள்ளது’ என்ற கருத்தை அவர் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற பாடல் பாடித் தெரிவித்தார்.
‘மெட்டுப் போடு’ பாடலைப் பாடி இரண்டாம் பரிசை வென்றார் வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி மாணவர் ஆரவ் பிரவீன், 7.
தொடக்கநிலை 4 முதல் 6 பிரிவு பாடல் போட்டியில் ஸ்ருதி நாகராஜன் நாயர் வென்றார்.
புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத் தன்னார்வப் பாடல் குழுவின் பாடகர்களும் சிறுவர்களையும் பெற்றோரையும் இசைமழையில் நனையவைத்தனர்.