லாஸ் ஏஞ்சலீஸ்: உலகெங்கும் பிள்ளைகளிடையே புகழ்பெற்ற ‘பார்பி’ பொம்மைக்கு 65 வயதாகிவிட்டது!
அமெரிக்க வர்த்தகரான ரூத் ஹேண்ட்லர் தனது மகள் பார்பராவை மனத்தில் நிறுத்தி, 1959ஆம் ஆண்டு பார்பி பொம்மையை உருவாக்கினார்.
இந்த ஆண்டு (2024) 65ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பார்பி, இப்போது பல்வேறு வண்ணங்களில், பல விதமான தலைமுடி அமைப்பு, உடல்வாகு கொண்ட பொம்மைகளாக உலக அரங்கில் வலம்வருகிறது.
இந்தப் பொம்மை, 35 சரும நிறங்களில், 9 வகையான உடல்வாகுகளில், 97 விதமான தலைமுடி அமைப்புடன் வெளிவருகிறது.
சக்கர நாற்காலி பார்பி, ‘டௌன் சிண்ட்ரோம்’ எனப்படும் மனநலிவுக் குறைபாடுள்ள பார்பி, பருமனான பார்பி, ‘விட்டிலிகோ’ எனும் சருமம் திட்டுத்திட்டாய் நிறமிழந்து காணப்படும் பாதிப்புடைய பார்பி, பாலினம் சாராத பார்பி என விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
‘அழகுக்கான’ தரநிலைகளையும் பார்பி பொம்மையையும் தொடர்புபடுத்தி குறைகூறல்களைச் சந்தித்தாலும் அவ்வப்போது மாற்றங்களைச் செய்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
இருப்பினும், பார்பி பொம்மைகளுக்குக் கையால் வண்ணம் தீட்டுவது, அதே தையல் இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவற்றை 1959 முதல் இப்போது வரை அது மாற்றிக்கொள்ளவில்லை.