ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தமிழர் பேரவை இளையர் பிரிவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து ‘வணிக வேட்டை’ சவாலுக்கு ஏற்பாடு செய்தன.
அதில் பங்குபெற்ற 20 வணிகக் குழுக்கள், கடந்த சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 4.15 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மூன்று அனுபவமிக்க நீதிபதிகள், 200 பார்வையாளர்களின் முன்னிலையில் தங்கள் வணிகங்களைப் படைத்தன.
வணிகங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகளின் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளைச் சார்ந்தவையாக அமைந்தன.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட பரதநாட்டிய உடைகள், உபகாரச் சம்பளம் தேடித்தரும் செயலி, ஆயுர்வேத உணவகம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள், தற்காப்புக் கலைகளை மறு உயிர்ப்பிக்கும் பயிற்சியகம் என இளையர்களின் புத்தாக்கச் சிந்தனைகள் வியப்பூட்டின.
முதல் பரிசாக $2,000 காசோலையை வென்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர்களான 17 வயது ராஜீவ், தன்வின் இருவரும் செயற்கை நுண்ணறிவு மூலம் மறுசுழற்சிக்கான பொருள்களை தனித்தனியாகப் பிரிக்கும் திட்டத்தைப் படைத்தனர்.
இரண்டாம் பரிசாக $1,500 காசோலையை வென்ற என்டியு மாணவர் ஆனந்தராஜன் ஆர்த்தி, 21, பெண் சுகாதாரப் பொருள்களை ரசாயனங்களின்றி தயாரிப்பதைப் பற்றிப் படைத்தார்.
இது தன் நெடுநாள் கனவு என்றும் நடுவர்களில் ஒருவரான ‘டைமண்ட் கிளாஸ்’ வணிகத் தோற்றுநர் டாக்டர் கேசவன் சத்தியமூர்த்தி, இவ்வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆர்வங்காட்டியது தனக்கு மகிழ்ச்சியளித்தது என்றும் கூறினார் ஆர்த்தி.
டாக்டர் கேசவன் பல வணிகங்களுக்கும் புதிய வெளிநாட்டு இணைப்புகளையும் வழங்கவுள்ளதாகக் கூறினார். மேலும், சில வணிகங்களில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மூன்றாவது பரிசை வென்ற ஸ்ரீவத்சன், 20, ஆதித்யா, 22, உணவகங்களின் விநியோகிப்பாளர்களை ஒரே தளத்தில் இணைக்கும் செயலியைப் படைத்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், “தொழில்முனைவர்கள் தங்கள் தனித்துவத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும்,” என அறிவுறுத்தினார்.
ஜனவரி 28ஆம் தேதி தேநீர் கலந்துரையாடலுடன் தொடங்கிய வணிக வேட்டை, பிப்ரவரியில் மூன்று பயிலரங்குகளையும் நடத்தியது.
“இளையர்கள் வணிகத்தில் பல பரிமாணங்களை எடுக்க வணிக வேட்டை உதவுகிறது,” என தமிழர் பேரவை இளையர் பிரிவின் துணைத் தலைவர் செந்தில் ஆண்டியப்பன் கூறினார்.
“தமிழ் இலக்கியத்திலும் வணிகம் பற்றி கூறப்பட்டுள்ளது,” என என்டியு தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் சந்துருவேல் கூறினார்.
உலகப் பொருளியல் மன்றம் 2019ல் நடத்திய ஆய்வின்படி, 17% சிங்கப்பூர் இளையர்களே தொழில்முனைவர்களாக வர விரும்புவதாகவும் இதை மாற்ற வணிக வேட்டை துணைபுரிவதாகவும் அவர் சொன்னார்.