பள்ளியில் சிறந்து விளங்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கான புதிய கல்வி உதவித்தொகை, பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் தமிழர் சங்கம் நடத்திய 74வது பொங்கல் விழாவில் அறிமுகமானது.
சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறை மலை மாறனின் (1961-2016) பெயரைக் கொண்ட உதவித்தொகையைத் தொடங்கிவைக்க, அவருடைய மனைவி திருவாட்டி வெண்ணிலா மாறன் $10,500 காசோலையை வழங்கினார்.
திரு மறை மலை மாறன் 1998 முதல் 2016 வரை சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் தலைவராகச் சேவையாற்றினார். சங்கத்தின்வழி அவர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான துணைப்பாடத் திட்டங்களையும் குண்டலினி யோகாசன வகுப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.
1980களிலிருந்து இயோ சூ காங் அடித்தள பணிகளிலும் பங்கேற்றார் திரு மாறன். இயோ சூ காங் குடிமக்கள் ஆலோசனைக் குழு (சிசிசி) துணைத் தலைவர், மக்கள் செயல் கட்சி இயோ சூ காங் கிளைச் செயலாளர், இயோ சூ காங் சமூக நிலைய மேலாண்மைக் குழு (சிசிஎம்சி) தலைவர் ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்தார்.
‘சிசிஎம்சி’யில் தன் தொண்டிற்காக 2001ல் பொதுச் சேவை விருதையும் 2015ல் பொதுச் சேவை நட்சத்திர விருதையும் அவர் பெற்றார். ஆனால், எதிர்பாராவிதமாக 2016ஆம் ஆண்டு தமது 55 வயதில் அவர் காலமானார்.
“என் கணவர், மாணவர்கள் மட்டுமல்லாது பல இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களும் ஆசைகளும் வைத்திருந்தார். அவர் மிகுதியான தமிழ்ப்பற்றும் உடையவர்,” என்றார் திருவாட்டி வெண்ணிலா.
“அறுவடைத் திருநாளாகக் கருதப்படும் பொங்கல் திருநாளைப்போல, அவ்வாறே இந்த உதவித்தொகை நம் எதிர்காலத் தலைவர்களை அறுவடை செய்கிறது,” எனப் பாராட்டினார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே தனலெட்சுமி.
“இந்த உதவித் தொகையைத் தொடங்கவேண்டுமென்பது திரு மாறனின் அவா. சமூகத்திற்காக அவர் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவர் சார்பாக அவற்றை நிறைவேற்றிவருகிறோம்,” என்றார் சிங்கப்பூர் தமிழர் சங்கத் துணைத் தலைவர் திரு திருச்செல்வம்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் உதவித்தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்தது.
இனி சங்கம் பண்பாடு, தமிழ்மொழி மட்டுமன்றி, கல்வி, விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறினார் சிங்கப்பூர் தமிழர் சங்கத் தலைவர் ஜான் ராகவன்.