உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் பேண வேண்டிய அவசியம் குறித்தும் அண்மைய ஆண்டுகளாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேரம் செலவிடுவதில் தொடங்கி, விரைவுணவு, பின்னிரவு உணவு உண்பது என, மூளை இடும் கட்டளைகளுக்கு அடிபணிவதால் சுரக்கும் ‘டோப்பமைன்’ எனும் ஹார்மோன் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.
டோப்பமைன் என்பது மனித உடலில் இயற்கையாக சுரக்கும் ஒரு ஹார்மோன்.
டோப்பமைன் அதிக அளவில் சுரக்கும்போது உற்சாகம் ஏற்படுகிறது. குறையும்போது மனச்சோர்வும் கவலையும் ஏற்படுகிறது. மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காத, அதே சமயம் உற்சாகம் தரக்கூடிய எளிதான செயல்களைச் செய்து முடிக்கும்போது இந்த ஹார்மோன் இயல்பாகவே அதிகம் சுரக்கிறது.
எடுத்துக்காட்டாக, குறைந்த நேரத்தில் அதிக குறுங்காணொளிகள் பார்ப்பது, எளிதில் கிடைக்கும் சத்து இல்லாத உணவுகளை உண்பது, நினைத்தபோதெல்லாம் புகைப்பிடிப்பது, வெறும் மன மகிழ்வுக்காக தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது உள்ளிட்டவை செய்ய எளிதாகவும் அதிக சுரப்புக்கும் உடனடி உற்சாகத்துக்கும் வழிவகுக்கிறது. ஏறத்தாழ ஒரு சாதனை உணர்வையும் நினைவையும் அது ஏற்படுத்துகிறது.
இந்த மிகைச்சுரப்பு தரும் கிளர்ச்சி தொடர்ந்தால், நாளடைவில் கவனச் சிதறல் தொடங்கி பல்வேறு மனநலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
இவ்வகைத் தூண்டுதல் நிறைந்த உலகில், மன அமைதிக்கு வித்திடும்‘டோப்பமைன் நோன்பு’ எனும் முறையைக் கடைப்பிடிப்பதில் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
நோன்பின் நோக்கம்
மூளைக்கு விரைவாகத் தூண்டுதல் அளிக்கும் செயல்களை கட்டுப்படுத்துவது டோப்பமைன் நோன்பு. ஒருவருக்குச் செயற்கையாகக் கிளர்ச்சி தரும் செயல் எது என்பதைக் கண்டறிந்து, அதனைக் குறைப்பதும் தேவையான அளவு மட்டுமே டோப்பமைன் சுரக்க உதவும் உணவுப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவதும் இந்த நோன்பின் நோக்கம்.
கடைப்பிடிக்கும் வழிகள்
இதனைக் கடைப்பிடிக்க முதலில் தாங்களாகவே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும். அவற்றைக் கடைப்பிடிக்க எளிதாக அமைத்துக் கொள்வதும், அவற்றை மேலும் எளிதாக்க வகைசெய்யும் திசைதிருப்பல்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் முதற்படி உணவுமுறையைச் சீர்ப்படுத்துதல். அவ்வப்போது ஏற்படும் மூளை சமிக்ஞைகளைப் பின்பற்றாமல், சத்தான சமச்சீரான உணவு அட்டவணை போட்டு பின்பற்றுவது இந்த சுரப்பைக் கட்டுப்படுத்திச் சீர்செய்கிறது. உரிய அளவு புரதம், தாதுச் சத்துகளை உட்கொள்வது அடிப்படை ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.
திரை நேரத்தைக் குறைத்துக்கொள்வதும் அவசியம். இன்றைய இணைய உலகில் இதனைக் கடைப்பிடிப்பது கடினம் என்றாலும் சில எளிதான விதிமுறைகளை வகுத்து, அதைப் பின்பற்ற முயற்சி செய்வது நல்லது.
எடுத்துக்காட்டாக, வாரம் ஒரு நாள் மட்டுமே இணையத் தொடர்களை பார்க்க வேண்டும். அல்லது தினம் ஓர் அத்தியாயம் மட்டுமே பார்க்க வேண்டும் எனப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் தூங்குவதற்கு ஓரிரு மணி நேரம் முன்பிருந்தும் கைப்பேசியைப் பார்க்காமல் இருப்பது, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்காமல் திறன்பேசியைத் தொடுவதில்லை, இணைய விளையாட்டுகளை விளையாடுவதில்லை என்பன போன்ற விதிமுறைகளை வகுத்துக்கொள்ளலாம்.
சிறு சிறு பொருள்கள் வாங்குவதை இணையம் வழி செய்யாமல், நேரடியாகச் சென்று வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இது உந்துதலால் தேவையற்ற பொருள்கள் வாங்கும் பழக்கத்தைக் குறைக்க உதவும்.
மாதம் தொடங்கும்போதே செலவினங்களைப் பட்டியலிட்டு, அதனைப் பின்பற்றிச் சிக்கனமாக இருக்க முயலலாம். இது மூளைக்கு மனநிறைவு அளிப்பதோடு, வாழ்வில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த உதவும்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். பயிற்சிக்குத் திறன்பேசி எடுத்துச் செல்லாமல் இருப்பது, அன்றாடம் பயணம் செய்யும்பொழுது திறன்பேசியுடன் செலவிடாமல் தவிர்ப்பதும் இந்த நோன்பிற்கு உதவும்.
இது தவிர, மூளைக்குக் குறைவான தூண்டுதல் வழங்கும் தோட்டக்கலை, வாசிப்பு, பிறருடன் நேரம் செலவிடுதல், இசைக்கருவிகள் உள்ளிட்ட ஏதேனும் ஒரு கலையை புதிதாகக் கற்றுக் கொள்வது போன்றவற்றைச் செய்வது, ஹார்மோன் சுரப்பிகளை கட்டுப்படுத்தி, சுரப்பைச் சீராக்கும்.
உரிய அளவு ‘புரோபயோட்டிக்ஸ்’ சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, கெட்ட கொழுப்புகளைத் தவிர்த்து நல்ல கொழுப்புகளை உட்கொள்வது, போதுமான அளவு உறங்குவது, சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதும் டோப்பமைன் சுரப்பைச் சீராக்கி மனநலம் மேம்பட உதவும்.
எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன், மனம் ஒன்றிச் செய்வது, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகிய நேர்மறை உணர்வுகளை உரிய அளவு ஏற்படுத்தி, கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மனச் சமநிலைக்கு வழிவகுக்கும்.
இந்த டோப்பமைன் நோன்பு ஒரு சிகிச்சை முறை இல்லை என்றாலும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முதற்படியாக அமைகிறது. மிகுந்த கவனச் சிதறல், கட்டுப்படுத்த இயலாத கோபம், மனச்சோர்வு, அழுத்தம் எனத் தீவிர மனச்சிக்கல்களை சந்தித்தால் உரிய மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நன்மை தரும்.