நாட்டியத்தின் மீதுள்ள நாட்டத்தினால் பல ஆயிரம் வெள்ளி ஊதியம் பெறும் வங்கி வேலையை விடுத்து முழுநேர நாட்டிய பயிற்றுவிப்பாளரானார் ஷைலு வின்ஸ்டன். தற்போது 36 வயதாகும் இவர் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
தன்னுடைய 22வது வயதில் சிங்கப்பூரின் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லேண்ட் வங்கியில் பணிபுரிய தொடங்கிய இவர், வெகுவிரைவிலேயே பணியில் பல பொறுப்புகளை ஏற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார்.
அதேசமயம் இளம்வயது முதலே பரதநாட்டியம் கற்றுவந்த இவர் நாட்டியத்தின் மீதுள்ள அதீத ஈடுபாட்டினால் தன்னுடைய ஓய்வு நேரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் இலவசமாக நாட்டியம் கற்றுக்கொடுத்தும் வந்தார்.
ஆரம்பத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் கீழுள்ள வெற்றுத் தளத்தில் நாட்டியப் பாடங்களை வார இறுதி நாள்களில் கற்றுக்கொடுத்தார். வாரநாள்களில் முழுநேர வங்கிப் பணி வாரயிறுதிகளில் நாட்டிய பயிற்சியாளர் என ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் அயராமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் திருமணமாகி ஓர் ஆண் குழந்தைக்குத் தாயாகவும் தன் கடமைகளை ஆற்றிவந்த நேரத்தில் நாட்டிய வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரத் தொடங்கினர். அதிக வருமானம் ஈட்டித் தரும் வங்கிப் பணியா அல்லது மனத்திற்கு நிறைவளிக்கும் கலையா என்று தடுமாறிய நிலையில் கலைக்கே முன்னுரிமை அளித்தார் ஷைலு.
குடும்பத்தினரின் மிகுந்த ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் 2017ஆம் ஆண்டில் ‘அநாஸ்ஃபா‘ எனும் கலைப் பள்ளியைத் தொடங்கினார். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 25 ஆசிரியர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் இப்பள்ளியின் இயக்குநராக இருக்கிறார் ஷைலு.
இப்பள்ளியில் பரதநாட்டியம், கதக் உள்ளிட்ட நடனங்கள் மட்டுமல்லாது வாய்ப்பாட்டு, இசைக்கருவி பயிற்சி வகுப்புகளும் உள்ளன. இப்பள்ளியின் கிளைகள் செங்காங், சிராங்கூன், தெம்பனீஸ், ஈஷூன் ஆகிய வட்டாரங்களில் செயல்பட்டு வருகின்றன.
இத்துடன் பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்களைச் சென்றடையும் நோக்கில் ‘சீலா ஸ்டூடியோ’ எனும் நிறுவனத்தை உருவாக்கி அதன்மூலம் இணையம்வழி பாடங்களையும் எடுத்து வருகிறார் இவர். மேலும் ஃபேஷன் துறையிலும் ஆர்வம் உள்ள இவர் ‘லுனாவ் ஈவண்ட்ஸ்’ எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல அழகிப் போட்டிகளும் ஃபேஷன் கண்காட்சிகளும் நடைபெற்றுள்ளன.
ஒருமுறை வாழும் இந்த வாழ்க்கை என்னும் வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சமூக எதிர்பார்ப்புகளையும் சுற்றத்தார் அளிக்கும் மன அழுத்தங்களையும் புறந்தள்ளிவிட்டு நம் மனத்திற்குப் பிடித்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்வதே மனநிறைவை அளிக்கும் என்றும் கூறிய ஷைலு, தொடர்ந்து கலைக்குத் தொண்டாற்றுவதையே தன் வாழ்வின் இலக்காகக் கருதுகிறார்.