உடற்பயிற்சிக் கூடங்களின் சூழல் சிலருக்குப் பயத்தையோ தாழ்வு மனப்பான்மையையோ ஏற்படுத்த வாய்ப்புண்டு. உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வதில் அவர்கள் உற்சாகமோ மகிழ்ச்சியோ அடைவதற்கு இது தடையாக உள்ளது.
உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும்கூட சிலர் வேண்டாவெறுப்பாக உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று வருகின்றனர். இதன் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் தயக்கத்திற்கும் அச்சத்திற்குமான காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது.
அத்தகைய காரணங்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் சற்றே ஆராய்வோம்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022ல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கினார் திவ்யா நந்தகுமாரன், 23.
“உடல் எடை அதிகமாக இருந்ததால் தாழ்வு மனப்பான்மை என்னுள் குடிகொண்டிருந்தது. அதனாலேயே உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்வதை நான் சில நேரங்களில் புறக்கணிப்பதுண்டு,” என்று திவ்யா கூறினார். இருப்பினும், உடல்நலத்தை முதன்மையாகக் கருதி தனது உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் இறங்கினார் திவ்யா.
உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதற்குமுன் உடல் ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் சிறிது சிறிதாக அதிகரிப்பதற்காக, சற்றே எளிய உடற்பயிற்சியில் இவர் ஈடுபட்டார்.
“உடல் எடை எப்படி இருந்தாலும் நம்முள் ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை முதலில் உடைத்தெறிய வேண்டும். நம்மைச் சுற்றி உடற்பயிற்சி செய்வோர் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் செயல்படுவதும் முக்கியம்,” என்று திவ்யா வலியுறுத்தினார்.
‘ஃபிட்மந்த்ராஸ்’, ‘கோப்பி வித் வேன்ஸ்’ நிறுவனங்களின் நிறுவனரான திரு வாணன் கோவிந்தசாமி தற்போது தனிப்பட்ட பயிற்சியாளராகவும் தொழில் முனைவராகவும் தன்முனைப்புப் பேச்சாளராகவும் திகழ்கிறார்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக விளங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறார் வாணன்.
“உடற்பயிற்சிக் கூடங்களில் தன்னம்பிக்கை குறைவாக இருப்போரில் உடல் எடை குறைக்க எண்ணுவோர், மெலிந்த உடல் கொண்டோர் என இரு தரப்பினரைக் காண முடியும்,” என்று இவர் கூறினார்.
“ நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லலாம். ஒருவருக்கொருவர் தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்க இது உதவும். தற்போது, உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வது சமூக ஊடகங்களில் அதிக கவனம் ஈர்க்கும் வழக்கமாக மாறியுள்ளது. இதற்கு அப்பால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடிப்பதற்காக உடற்பயிற்சி செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்று வாணன் கூறினார்.
உடற்பயிற்சித் துறையில் 18 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் உள்ள இவர், “உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லத் தயங்குவோர் வெளியிடங்களிலோ வீட்டிலோகூட உடற்பயிற்சி செய்யலாம்,” என அறிவுரை வழங்கினார்.
உடற்பயிற்சிக் கூடத்திற்கு முதன்முறை செல்வோரிடையே எவ்வித அச்சங்கள் நிலவக்கூடும் என்பது குறித்தும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் மனநல ஆலோசகர் டாக்டர் பத்மா ஜெய்ராம் எடுத்துரைத்தார்.
“மற்றவர்கள் தங்களைக் குறைவாக எடைபோடுவார்களோ உடற்பயிற்சிக் கருவிகளைத் தவறான முறையில் பயன்படுத்துகிறோமோ என்பன போன்ற அச்சங்கள் பலருக்கு ஏற்படுவதுண்டு,” என்றார் அவர். வளர்ச்சி குறுகியதாக இருந்தாலும் அது தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்து, எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம் என்று டாக்டர் பத்மா ஜெய்ராம் வலியுறுத்தினார்.