அனுஷா செல்வமணி
உடலில் ஏற்படும் பெரும்பாலான உபாதைகளுக்கு முக்கியத்துவம் தருவது தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் நம் காதுகளுக்கு அதே அளவு முக்கியத்துவம் தருகிறோமா என்பது கேள்விக்குறியே. ஒரு சிறு உறுப்பாக இருந்தாலும் செவித்திறனின்றி வாழ்க்கை சிக்கலானதாக இருக்கலாம்.
‘கொக்லியர் லிமிடெட்’ எனும் மருத்துவச் சாதன நிறுவனம், பல ஆண்டுகளாக செவிப்புலன் சாதனங்களை உற்பத்தியும் விநியோகமும் செய்து வருகிறது.
இந்நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, சிங்கப்பூரில் நான்கு பேரில் ஒருவருக்கும் குறைவானவர்கள் மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் காதுகளைப் பரிசோதித்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டது.
கவலைக்குரிய இந்தக் கண்டுபிடிப்பில், கேட்கும் திறன் சற்று மந்தமாக இருப்பவர்களில், 76 விழுக்காட்டினர் தக்க சிகிச்சை பெறுவதற்குத் தயங்குகின்றனர். நிலைமை அவ்வளவாக மோசமில்லை, காதுகளைப் பரிசோதித்துப் பார்க்கத் தயக்கம் போன்றவை அலட்சியப்படுத்துவதற்கான காரணங்களாக இருக்கலாம்.
செவிப்புலன் தொடர்பில் சிரமங்களை எதிர்நோக்கும் பெரும்பாலானோர், தங்கள் வேலையிலும் குடும்பத்திலும் அதனால் பாதிப்புகள் ஏற்படாதவரை மருத்துவரை நாடிப் பரிசோதித்துக்கொள்ள தேவை இல்லை என்பது சிலரின் கருத்தாகும்.
காதின் நலனைப் பாதுகாப்பதில் ஒருவர் நாட்டம் காட்டவில்லையென்றாலும் அவருடைய நண்பர் அல்லது குடும்பத்தினர் அவர்களை மருத்துவரிடம் செல்ல ஊக்குவிக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
சுகாதார ரீதியாக, காது கேளாமை உலகளவில் ஒரு நோயாகக் கருதப்படுகிறது. தற்போது ஐந்து பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தாலும் 2050க்குள் அது நான்கில் ஒன்றாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் 422,000 முதியவர்கள் இதனால் அவதிப்படுகிறார்கள். அதோடு, 100,000க்கும் மேற்பட்டவர்கள் செவிப்புலன் குன்றியவர்களாக இருக்கின்றனர். ஆனால் 3.3 விழுக்காட்டினர் செவிப்புலன் சாதனத்தை அணிகின்றனர்.
தமது 14வது வயதில் செவிப்புலன் திறனை இழந்த 43 வயது சாந்தி சண்முகம், செவிப்புலன் சாதனத்தைப் பயன்படுத்தி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், மொத்தமாகத் தமது செவிப்புலனை இழந்த இவர், காது கேட்பதற்கு உதவும் சாதனத்தைப் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார்.
2020ல் அறுவைசிகிச்சை மேற்கொண்டு, அதன் பின்னர் ஆறு மாதங்களுக்குச் சிகிச்சை பெற்ற அவர், செவிப்புலன் சாதனத்தைப் பயன்படுத்தியதற்கும் அதை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்டதற்கும் அதிக வேறுபாட்டைக் கண்டதாக குறிப்பிட்டார். தற்போது தமக்கு நன்கு காது கேட்பதாக அவர் கூறினார்.