நூல் வாசிப்புப் பழக்கம், அறிவாற்றல் திறனை மட்டும் மேம்படுத்துவதில்லை. மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும், வயதாகும்போது நரம்பியல் சார்ந்த கோளாறுகளில் இருந்தும் காப்பாற்றும் என்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாசிப்புப் பழக்கம் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் சாத்தியத்தை இது குறைக்க உதவும். அல்சைமர் என்பது மூளையைச் சுருங்கச் செய்து, மூளை அணுக்களைச் சிதைக்கும் ஒருவகை நரம்பியல் கோளாறு சார்ந்த நோயாகும். இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட நபரின் சமூகச் செயல்பாடு, நடத்தை, சிந்தனை திறன் குறையும். அப்படிப்பட்டவர்கள் வாசிப்பு போன்ற மன ரீதியான தூண்டுதல் செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போது வயது மூப்படைவதால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற மறதிநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
வாசிப்புப் பழக்கம் ஒருவரைப் புத்திசாலியாக்கும் என்பது நாம் அறிந்ததே. இப்பழக்கம் மன அழுத்தத்தையும் குறைக்கவல்லது. புத்தகங்களைப் படிக்கும்போது அதில் இடம்பெற்றிருக்கும் சாராம்சத்திற்குள், இலக்கியத்துக்குள் மனம் நுழைந்துவிடும். அது நிஜ வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஒதுக்கிவைத்துவிடும். அது பற்றிய எண்ணங்களையும் அது மறக்கடித்துவிடும். மேலும், புத்தகம் படிப்பது மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வைக் குறைக்க உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் அது வழிவகுக்கும். மனதுக்கு ஓய்வையும் அளிக்கும். இதனால் மன அழுத்தத்தில் இருக்கும்போது மற்ற செயல்களில் கவனம் செலுத்துவதைவிட புத்தகம் வாசிப்பது சிறந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தினமும் தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பது மனதை நிதானப்படுத்த உதவும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற அது உதவி புரியும்.