காசர்கோடு: கோவிலுக்குச் சென்று காரில் திரும்பியபோது, அதிவேகமாக வந்த அவசர மருத்துவ வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூர், இரிஞ்சலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் பி. சிவகுமார், 54. அவரும் சரத் எஸ் மேனன், 23, சௌரவ், 15 என்ற அவரது இரு மகன்களும் காரில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், கோவிலிலிருந்து திரும்பியபோது செவ்வாய்க்கிழமை 11 மணியளவில் அவர்கள் சென்ற கார்மீது, அவசர மருத்துவ வாகனம் மோதியது.
கட்டப்பட்டு வரும் ஆறு தடங்கள் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் அந்த அவசர மருத்துவ வாகனம் வந்ததாகக் கூறப்படுகிறது.
காசர்கோடு வின்டச் மருத்துவமனைக்குச் சொந்தமான அந்த அவசர மருத்துவ வாகனம், பெண் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மங்களூரு நோக்கி விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விபத்தில் அவசர மருத்துவ வாகனத்தின் ஓட்டுநருக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிலிருந்த பெண் நோயாளியும், அவரின் கணவரும், பராமரிப்பாளர் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவசர மருத்துவ வாகனம் மோதிய வேகத்தில், அந்த ஹியூண்டாய் கார் கிட்டத்தட்ட 100 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.