புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட 15 டன் போலியான மசாலாப் பொருள்களை டெல்லி காவல்துறை கைப்பற்றியுள்ளது. ஆலை உரிமையாளர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆலை உரிமையாளர்களான திலிப் சிங் (46), சர்ஃபராஜ் (32), குர்சீத் மாலிக் (42) ஆகியோர் இந்த கலப்பட மசாலாப் பொருள்களை உள்ளூர் சந்தை விற்பனையாளர்களுக்கு அசல் தயாரிப்புகளின் அதே விலைக்கு விற்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
மீட்கப்பட்ட பொருள்களில் அழுகிய இலைகள் , அரிசி, கெட்டுப்போன தினைகள், மரத்தூள், மிளகாய்த் தலைகள், அமிலங்கள், போலிப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் ஆகியவை அடங்கும் என்று குற்றப்பிரிவு அதிகாரி ராகேஷ் பவேரியா தெரிவித்தார்.
வடகிழக்கு டெல்லியில் சில உற்பத்தியாளர்களும் கடைக்காரர்களும் பல்வேறு பிராண்டுகளின் கீழ் கலப்பட மசாலாப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
இரு ஆலைகளின் உரிமையாளர்களும், கலப்பட மசாலா பொருட்களை தயாரித்து, பொதுமக்களை ஏமாற்றுவதுடன், உயிருடன் விளையாடுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்வதாக காவல்துறை கூறியது.