கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தின் பர்தாமன், துர்காபூர் மற்றும் கிருஷ்ணா நகர்ப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்க அரசு ஊழலிலும், வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்தும் அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
மேலும் அவர், சந்தேஷ்காலி கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் இரக்கம் காட்டவில்லை. அந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் விருப்பம்.
குற்றவாளியின் பெயர் ஷாஜகான் என்பதால்தான் அவர் மீது திரிணாமூல் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரைக் கடைசி வரை பாதுகாத்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹுமயுன் கபிர் எனபவர், “இந்துக்களை பாகீரதி ஆற்றில் தூக்கி எறியுங்கள்,” என்று பேசியுள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் இருந்து மேற்கு வங்க அரசு இந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது என்பது தெரியவருகிறது. அவ்வாறு ஏன் இந்துக்களை அந்த அரசு இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த வேண்டும் என மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.