போபால்: மத்தியப் பிரதேசத்தில் விதிஷா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் ஒலிவாங்கியை காவல்துறை அதிகாரி மகேந்திர சிங் தாக்குர் அணைத்து விட்டார். ஏனெனில் அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணியைத் தாண்டியும் தனது பேச்சை நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுரேந்திர பட்வா காவல்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தார். அது அப்பகுதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அப்போது காவல்துறை அதிகாரியைப் பார்த்து ஏன் மைக்கை அணைத்தீர்கள் என்று சிவராஜ் சவுகான் கேட்டார். தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளில் முழங்கக்கூடாது என்பதால் மைக்கை அணைத்ததாக அதிகாரி மகேந்திர சிங் தாக்குர் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர பட்வா, கோபத்தில் அதிகாரி மகேந்திர சிங் தாக்குரை மிரட்டியுள்ளார். அப்போது சுரேந்திர பட்வா கூறும்போது, “கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போது மைக்கை அணைப்பதற்கு உனக்கு எவ்வளவு துணிச்சல்? உன்னுடைய நடத்தையால் நீ தூக்கி எறியப்படுவாய். மறுபடியும் நீ இங்கு வரமுடியாது. இவர் (காவல் துறை அதிகாரி) இங்கு நிறைய பிரச்சினைகள் செய்கிறார்,” என்று கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து ஒலிபெருக்கி மீண்டும் இயக்கப்பட்டது. மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வாவின் மருமகன்தான் இந்த சுரேந்திர பட்வா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரியை, சட்டமன்ற உறுப்பினர் மிரட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விதிஷா மக்களவைத் தொகுதியில் வரும் 7ஆம் தேதி 3-வது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.