கொச்சி: புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் நெகிழியில் சுற்றப்பட்டு அடுக்குமாடிக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே உள்ள சாலையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம் கேரளாவின் கொச்சியிலுள்ள பணம்பில்லி நகரில் நடந்துள்ளது.
அந்த ஆண் குழந்தையின் தாயார் பதற்றத்தில் சிசுவைக் கொன்றுவிட்டு அதன் உடலை வீட்டிலிருந்து வெளியே எறிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
23 வயதுடைய அந்தப் பெண் மீது காவல்துறையினர் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தவுள்ளனர்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மருத்துவப் பராமரிப்பு பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
திருமணமாகாத பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்ற கோணத்தில் மூத்த காவல் அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.
அதனால், பெண்ணின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
பெண்ணின் பெற்றோர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் அந்தப் பெண் கருவுற்றிருந்தது தெரியாது.
அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்ட அந்தப் பெண், காலை ஐந்து மணியளவில் குளியல் அறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தூக்கியெறியப்பட்ட குழந்தை சாலையில் சிறிது நேரம் கிடந்ததை அடுத்து அதன் உடலை ஓட்டுநர் ஒருவரும் பாதுகாவல் அதிகாரி ஒருவரும் கண்டனர்.
பின்னர், போர்வை ஒன்றைக் கொண்டு உடல் மறைக்கப்பட்டது.
மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்துள்ளது என்று பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வுச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.