திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தில் இவ்வாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் உள்ளது. கடும் வெயில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் மாநிலங்களில் இந்த ஆண்டு கேரளாவும் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, கடந்த 26ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட 10 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் கடும் வெயில் காரணமாக கடந்த புதன்கிழமை (மே 1ஆம் தேதி) ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் கட்டட மற்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயத்தில் ஷமீர் (வயது 35) என்பவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.