மும்பை: இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 136.6 டன்னாக உயர்ந்தது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 8 விழுக்காடு அதிகம். உலக தங்க மன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இது தெரியவந்துள்ளது.
விலை உயர்ந்த போதிலும் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் பொருளியலில் அதிக வருமானத்தை இது பிரதிபலிப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்கத்துக்கான மொத்த தேவையில், இந்தியாவில் ஆபரணத் தேவை 91.9 டன்னிலிருந்து 4 விழுக்காடு உயர்ந்து 95.5 டன் அளவை எட்டியது.
மொத்த முதலீட்டுத் தேவை (கட்டி, காசு) 34.4 டன்னிலிருந்து 19 விழுக்காடு அதிகரித்து 41.1 டன்னாக இருந்தது.
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை, மதிப்பு அடிப்படையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி-மார்ச் காலாண்டில் 20 விழுக்காடு உயர்ந்து ரூ.75,470 கோடியாக உள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கும் ரஷ்யா-உக்ரேன் போருக்கும் மத்தியில் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடச் சொத்தாகக் கருதிய முதலீட்டாளர்களிடம் இருந்து தங்கத்துக்கான தேவை அதிகரித்தது.