மும்பை: நாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியபோதும் இன்னமும் சராசரியாக 30 - 35 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்த ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 66% ஐஐடி மாணவர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. 34 விழுக்காட்டினருக்கு வேலை கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் குறைந்ததே, வேலை கிடைக்காத மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகியிருக்கிறது. சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் வளாகத் தேர்வுகளை நடத்தி வருகின்றன.
சில ஐஐடிக்கள், வேலைவாய்ப்புள்ள நிறுவனங்களைத் தேடி வளாக நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றன. சில ஐஐடிக்கள், ஜூன் அல்லது ஜூலையில் நடக்கும் வளாக நேர்காணல் வரை காத்திருக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளன.
இந்த வேலையின்மைக்குக் காரணமாக, உலகளாவிய பாதிப்புதான் என்றும், உலகம் முழுவதுமே தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி வாய்ப்பு குறைந்துள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள்.
செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் ஏஐ, தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பாதித்துள்ளது. ஐஐடியில் படித்த பல பட்டதாரிகள் தற்போது கல்வி மையங்களில் பேராசிரியர் பணிக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.