புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த 15ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது டெல்லி திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அவர் உள்ளார்.
இந்த வழக்கில் இடைக்கால பிணை கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
கவிதா தரப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, “கவிதாவின் 16 வயது மகனுக்கு அடுத்த மாதம் முதல் தேர்வு நடைபெற உள்ளதால், அவரது மகனை கவனிக்க கவிதாவுக்கு பிணை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கில் கவிதா முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறி இதற்கு அமலாக்கத் துறை எதிா்ப்பு தெரிவித்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இடைக்கால பிணை மனுவை நீதிபதி திங்கட்கிழமை தள்ளுபடி செய்தார்.