ஜெய்ப்பூர்: ஜெப்பூரில் உள்ள கன்வாடியா அரசு மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை ராஜஸ்தானைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வந்துள்ளார். அவருக்குப் பிரசவம் பார்க்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டதை அடுத்து, செய்வதறியாது திகைத்த அந்தக் கர்ப்பிணி மருத்துவமனை நுழைவு வாயிலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இவ்விவகாரம் அங்குள்ள சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று அரசு மருத்துவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங் கூறுகையில், “இந்த தகவலைக் கேள்விப்பட்டதும் உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
“அக்குழு அளித்த அறிக்கையின்படி மருத்துவர்கள் குசம் சைனி, நேஹா ரஜாவத், மனோஜ் ஆகிய மூன்று மருத்துவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
“அத்துடன், அலட்சியமாக செயல்பட்டதற்காக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர சிங் தன்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.