சென்னை: தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் விதமாக பாரதிய ஜனதா கட்சி கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார்.
அதைப் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், “சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் போவது இல்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை,” என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியது இடம்பெற்றிருந்தது.
இந்த விவரங்களை முன்வைத்து பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே ஏப்ரல் 1ஆம் தேதி மோடி தனது எக்ஸ் தளத்தில், “கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது,” என்று சாடியிருந்தார்.
இதற்கிடையே இந்தியாவுக்கான இலங்கை முன்னாள் தூதர் ஆஸ்டின் ஃபெர்னாண்டோ, தேர்தலுக்காக கட்சிகள் கச்சத்தீவு விவகாரத்தை கிளப்பியிருக்கின்றன. தேர்தலுக்குப் பிறகு அது அடங்கிவிடும்,” என்று எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். 1980களின் பிற்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை குறித்து இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் அறிக்கைகளை நினைவுகூர்ந்த அவர், இந்திய அரசாங்கம் இலங்கை கடல்சார்ந்த அனைத்துலக எல்லையைத் தாண்டினால், அது ‘இலங்கை இறையாண்மையை மீறுவதாக’ பார்க்கப்படும் என்றார்.
மற்றொரு நிலவரத்தில் பாஜக கிளப்பிய கச்சத்தீவு விவகாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.
“இலங்கையுடனான நட்புறவுக்காக 1974ல் கச்சத்தீவு வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும்கூட, வங்கதேசத்துடன் எல்லைகளைப் பரிமாற்றம் செய்துதான் இருக்கிறார். பத்து ஆண்டுகளில் இப்போது திடீரென எல்லைப் பிரச்சினை, இந்திய நிலப் பகுதி பற்றி இப்போதுதான் மோடி விழித்துக் கொண்டிருக்கிறார்,” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.