திருவனந்தபுரம்: கேரளாவில் 55 வயது நோயாளியின் நுரையீரலில் இருந்து 4 செ.மீ. நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கிய அச்சுதன் (உண்மைப் பெயரல்ல) என்பவர் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது நுரையீரலில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சி சிக்கியிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, மருத்துவர் டிங்கு ஜோசப் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சியை அகற்றினர்.
கரப்பான்பூச்சி உள்ளே அழுகிப்போக ஆரம்பித்துவிட்டதால் நோயாளியின் சுவாசப் பிரச்சினை மோசமடைந்துள்ளது எனத் தெரிவித்த மருத்துவர்கள், கரப்பான்பூச்சியை அகற்ற மருத்துவர்கள் குழுவிற்கு 8 மணி நேரம் பிடித்ததாகக் கூறினர்.
நோயாளிக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்சினைகள் இருந்ததால், அறுவை சிகிச்சையின் போது சிரமத்தை எதிர்நோக்கினோம்.
இந்தக் கரப்பான் பூச்சி நோயாளியின் முந்தைய சிகிச்சையின்போது தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் வழியாக நுரையீரலுக்குச் சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்.
நோயாளி தற்போது முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.