சிந்த்வாரா: மத்தியப் பிரதேசத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவில் இந்த விலை உயர்வால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் வருத்தத்தில் உள்ளனர்.
இதற்கு விவசாயிகளின் வயல்களில் உள்ள பூண்டு திருட்டு போவதே காரணம் எனக் கூறப்படுகிறது. பூண்டு திருட்டு போவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்க சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் வயல்வெளிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவி கண்காணிப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.
இதுபற்றி பூண்டு விவசாயம் செய்து வரும் ராகுல் தேஷ்முக் என்ற விவசாயி கூறும்போது, “13 ஏக்கர் நிலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் முதலீடு செய்து பூண்டு பயிரிட்டேன்.
“அவற்றைச் சந்தையில் விற்பனை செய்ததில், ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இன்னும் பூண்டு பயிர் அறுவடை செய்யப்பட உள்ளது. பயிர்களின் பாதுகாப்புக்கு சூரிய சக்தியை பயன்படுத்தினேன். பூண்டு பயிர்களைக் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
சிலர் கேமராக்களை வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்துகின்றனர். திருட்டைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன என்றார்.