புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக பாரதிய கிஷான் யூனியன், பிகேடி தகவுன்டா அமைப்புகள் வியாழக்கிழமை பிற்பகல் ரயில் மறியல் போராட்டத்தினை அறிவித்தன.
விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் காவல்துறையினர் தடுத்துள்ளனர். ஹரியானா எல்லையில் தடுப்புகள், முள்வேலி படுக்கைகள், துணை ராணுவத்தினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரதான விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 37 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த் கிஷான் மோர்ச்சாவும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாய சங்கத்தினருடன் மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறின. மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது.