புதுடெல்லி: ஈரானில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஈரானில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில், “ஈரானின் கெர்மன் நகரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில், ஈரான் அரசுக்கும், மக்களுக்கும் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனும், காயமடைந்தவர்களுடனும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.