புதுடெல்லி: சீனாவின் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமெனில் இந்தியாவில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முன்னெடுப்பு முக்கியம் என்று இந்தியப் பாதுகாப்புத் துறையின் சிந்தனைக் குழுவான யுஎஸ்ஐ அமைப்பின் தலைமை இயக்குநர் பி.கே.சர்மா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பழைமையான பாதுகாப்புச் சிந்தனைச் குழுவாக இருக்கும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா (யுஎஸ்ஐ) 1870ல் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் ராணுவ பாரம்பரியம் மற்றும் கோட்பாடு, பாதுகாப்பு புவிசார் அரசியல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கை, திறன் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றை அது கையாள்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் ‘யுஎஸ்ஐ’ அமைப்பின் மூலமாக ஏராளமான பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த அமைப்பின் தலைமை அதிகாரியான இயக்குநர் ஜெனரல் பி.கே.சர்மா தனது புத்தாண்டுச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான பி.கே.சர்மா கூறுகையில், 2023ஆம் ஆண்டில், ஒரு நிலையற்ற உலகத்தைக் கண்டோம். இதற்கு தலிபன்மயமான ஆப்கானிஸ்தான், உக்ரேன் மற்றும் காசாவில் தொடரும் மோதல்கள், இதன் தொடர் தாக்கமான செங்கடலிலும் ஏற்பட்டுள்ள மோதல்கள் ஆகியவை காரணம் ஆகும்.
இவற்றால், உலகப் பொருளாதார வர்த்தகத்தில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டன. இதேபோல், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவுகள் ஆய்வு ஆகிய அதிநவீன தொழில்நுட்பத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைகிறது. இதனுடன் சேர்த்து செமி கண்டக்டர்கள் மற்றும் அரிய கனிமவளங்கள் மீதான புவிசார் அரசியல் நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டிலும் சவாலாகத் தொடரக்கூடும்.
ஒரே ஆறுதல் என்னவெனில், உலகின் தெற்கு வட்டார நாடுகளின் (குளோபல் சவுத்) எழுச்சியானது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது.
இந்நிலையில், இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிப் பாதையில் மறைமுக சவாலாக சீனா தென்படுகிறது. சீனாவின் சவாலை எதிர்கொள்ள விரிவான தேசிய ஒருங்கிணைந்த முன்னெடுப்பை இந்தியா உருவாக்க வேண்டும்.
உள்நாடு, வெளிநாடு மற்றும் ஒன்றிணைந்த அனைத்துத் துறைகளின் முப்பரிமாண அணுகுமுறையால் இச்சவாலை வெற்றி கொள்ளலாம்.
இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புகள், தொழில் கூட்டமைப்புகள், வங்கி மற்றும் நிதி நிறுவன சம்மேளனங்கள் ஆகியவை யுஎஸ்ஐயுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.