மும்பை: இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சளி, இருமல் மருந்துகளுக்குத் தடை விதித்துள்ளது.
இருமல் மருந்து தொடர்பில் உலகளவில் 141 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இத்தகைய மருந்துகளால் குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத சளி மருந்தை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. அத்தகைய வயதினருக்கு அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டது என்று கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கேமரூனில் குறைந்தது 141 குழந்தைகள் உயிரிழந்தன.
இந்தியாவிற்குள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால், 2019ஆம் ஆண்டில் குறைந்தது 12 குழந்தைகள் இறந்ததாகவும் மேலும் நான்கு பேர் கடுமையான ஊனமுற்றவர்களாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
உயிர் காக்கும் மருந்துகளை மலிவான விலையில் விநியோகிக்கும் இந்தியாவை உலகின் மருந்துக் கடை என வர்ணிக்கப்பட்டது.
ஆனால் அண்மைய சம்பவங்களில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்தியா ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து கேள்வியெழுந்துள்ளது.
டிசம்பர் 18ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் ‘நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலையான மருந்து கலவையைப் பயன்படுத்தக்கூடாது,” என்ற எச்சரிக்கையை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
‘Chlorpheniramine maleate and phenylephrine’ என்ற கலவை சளியை குணப்படுத்த மாத்திரையாகவோ திரவ வடிவிலோ பயன்படுத்தப்படுகிறது.