தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வருகின்றனர்.
இந்தக் கோவிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பௌர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளிமாநில பக்தர்களில் சில ஆண்களும் சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர்.
இதனால், வழிபாட்டுத் தலத்தில் மற்ற பக்தர்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைக் கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகை கோயிலின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
அதில், ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
பொதுவாக, பக்தர்கள் அனைவரும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறையை வரவேற்றுள்ளனர்.