ஐதராபாத்: தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொதுமக்களுடன் அரசியல் பிரமுகர்களும் நடிகர்களும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
அந்த மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.) அரசு ஆட்சி நடத்துகிறது.
இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற கடுமையாகப் போராடி வருகின்றன.
ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் காணப்படுகின்றன.
இந்த நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் ஐதராபாத்தில் எஸ்.ஆர். நகரில் தமது வாக்கைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
“காலை 7 மணி முதல் நகர பகுதிகள் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளிலும் வாக்குப் பதிவு மையங்களுக்கு வெளியே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து செல்வதைக் காண முடிகிறது. தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது,” என்றார்.
பிரதமர் வேண்டுகோள்
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பதிவில், தெலுங்கானாவின் என்னுடைய சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் சாதனை அளவாக வாக்கு பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“குறிப்பிடும்படியாக, இளம் மற்றும் முதல்முறை வாக்குச் செலுத்துபவர்கள் அவர்களுடைய வாக்குகளைச் செலுத்தும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் பி.ஆா்.எஸ். கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி. கவிதா, மத்திய அமைச்சர் மற்றும் தெலுங்கானா பா.ஜ.க. தலைவரான கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதேபோன்று, நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தின் ஜூபிளி பகுதியில் பி.எஸ்.என்.எல். மையத்தில் அமைக்கப்பட்ட 153ஆம் எண் கொண்ட வாக்கு சாவடியில் வாக்களித்தார்.
பொதுமக்களுடன் அவர் வரிசையில் நின்றார். அவரை அடையாளம் கண்டு கொண்ட மக்கள் புன்னகையுடன் வரவேற்றனர். நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
இந்த தோ்தலில் முதல்வர் சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் 221 பேர் பெண்கள். திருநங்கை ஒருவரும் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 35,655 வாக்கு மையங்களில் 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3ஆம் தேதி நடைபெறுகிறது.