புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட பிறகு புதன்கிழமை தமது சொந்த தொகுதியான கேரளாவில் உள்ள வயநாடு வந்து சேர்ந்தார்.
இந்தத் தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதி கைவிட்ட போது, ராகுல் காந்தியை காப்பாற்றியது கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிதான். தெற்கில் இவர் நின்ற முதல் தொகுதி.
ஏற்கெனவே காங்கிரஸின் கோட்டையாக இருந்ததால் ராகுலின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தது.
முன்னதாக 2019 தேர்தலின்போது பிரதமர் மோடி குறித்து மறைமுகமாக விமர்சித்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டு அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ராகுலின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
ஆனால், இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ராகுலின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கி மக்களவைச் செயலகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அவர் வயநாடு எம்.பி.யாகத் தொடர்கிறார்.
இதனால் வயநாடு தொகுதி மக்களும் உற்சாகமடைந்தனர்.