தன்னுடைய தாத்தா, பாட்டி, மாமா ஆகியோரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் 23 வயது இந்திய மாணவர் ஓம் பிரம்பாத் என்பவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து திங்கட்கிழமை காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சவுத் பிளேன்ஃபீல்டு காவல் பிரிவு குறிப்பிட்டது. 911 எண்ணை அழைத்தவர் ஓம் பிரம்பாத் என்றும் யார் குற்றம் புரிந்தது என்று கேட்கப்பட்டபோது ‘நானாக இருக்கலாம்’ என அவர் பதிலளித்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திலிப்குமார் பிரம்பாத், 72, அவரின் மனைவி பிந்து பிரம்பாத், 72 மற்றும் யாஷ்குமார் பிரம்பாத், 38, ஆகியோரை குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பாத் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
அண்டைவீட்டாருக்குத் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டதையடுத்து காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது மாடியில் அமைந்திருந்த வீட்டுக்குள் அதிகாரிகள் சென்றபோது அங்கு தம்பதியர் திலிப்குமார் - பிந்து துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர் என்றும் அவர்களின் மகன் யாஷ்குமாருக்கும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அறியப்படுகிறது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யாஷ்குமார் பின்னர் உயிரிழந்துவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஓம் பிரம்பாத் நியூ ஜெர்சிக்கு வந்ததாகவும் கொல்லப்பட்ட மூவருடன் ஒரே வீட்டில் அவர் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
புகாரின்படி தான் பயன்படுத்திய கைத்துப்பாக்கி இணையத்தில் வாங்கியது என்று ஓம் பிரம்பாத் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படும் ட்ரடிஷன்ஸ் கூட்டுரிமைக் கட்டடத்தில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த பல இளம் குடும்பங்கள் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.