ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ, எதிரே வந்த லாரிமீது மோதாமல் இருப்பதைத் தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் இருந்த எட்டு பள்ளிக் குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
நால்வர் பெரிய அளவில் காயமின்றி தப்பினர். மூன்று குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பெண் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று காவல் துணை ஆணையாளர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ லாரி வருவதைக் கவனிக்காமல் வேகமாகச் சென்று லாரியின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சியானது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.