ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்த பன்னுன் என்ற காலிஸ்தானிய தீவிரவாதிக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு தொல்லை அதிகரித்து வருகிறது.
அவர்களின் சமீப கால செயல்கள் இந்திய அரசுக்கு சினமூட்டி வருகின்றன.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவங்களை இந்திய அரசு கடுமையாகக் கருதுகிறது.
இந்நிலையில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட எஸ்எஃப்ஜே எனப்படும் சீக்கியர்களுக்கான நீதி என்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன், ஏர் இந்தியா விமானப் பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இதில், சீக்கிய சமுதாயத்தினர் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் உலகம் முழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
நவம்பர் 19ஆம் தேதி முதல் ஏர் இந்தியா சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் சீக்கிய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தினார். அவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் மிரட்டல் விடுத்தார்.
அத்துடன், புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மூடப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார். இதையடுத்து ஏர் இந்தியா விமானம் இயங்கும் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினரால் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.