பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல்வராக சித்தராமையா பதவியேற்று 6 மாதங்கள் ஆகியும் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்யாமல் பாஜக மேலிடம் அமைதி காத்து வந்தது.
அடுத்த மாதம் பெலகாவியில் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டும் என பாஜகவினர் கோரி வந்தனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) மாலை பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் அசோகா எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
லிங்காயத் பிரிவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அண்மையில் பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் ஒக்கலிகா தலைவர்களைச் சமாதானப்படுத்த, அப்பிரிவைச் சேர்ந்த அசோகா எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.