சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு சமூக விரோதக் கும்பல்கள் பாட்டிலையும், கற்களையும் வீசி தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. சமூக விரோதக் கும்பலின் இந்தத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தாக்குதலின்போது கட்சி அலுவலகத்தில் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாநிலத் தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.