ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் மக்களுக்குக் கண்டபடி இலவசங்களை அறிவித்து வருகின்றன.
சட்டவிரோதமாக அவை வாக்காளர்களை எட்டி பலவற்றையும் செய்யப்போவதாக ஆசை காட்டுகின்றன.
ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.
அந்த மாநிலத்தில் அக்டோபர் 9ஆம் தேதி புதிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்தன.
அது முதல் ரூ. 200 கோடி மதிப்புள்ள தேர்தல் இலவசப் பொருள்களை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
பணம், மதுபானம், போதைப் பொருள், நகைகள் உள்ளிட்ட பலவும் அவற்றில் அடங்கும் என்று மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவச ஆசை காட்டி மயக்குவதைத் தடுக்க அந்த மாநிலத்தில் 12 அதிகாரிகளைக் கொண்ட ‘புயல் படை’ என்ற ஓர் அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் காவல்துறை தலைவர் அதற்குத் தலைமை ஏற்றுள்ளார்.
“இதுவரை ரூ. 214 கோடி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
“அவற்றில் ரூ.25 கோடி பணமும் ரூ.20 கோடி மதிப்புள்ள மது பானமும் ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்கமும் நகைகளும் உள்ளடங்கும் என்று ஐபிஎஸ் அதிகாரியான விக்ரம் குமார் தெரிவித்தார்.
“இது தவிர ரூ. 60 கோடி மதிப்புமிக்க போதைப்பொருள், டீசல், உரம், முதலானவையும் சிக்கி உள்ளன.” என்று அவர் கூறினார்.
ராஜஸ்தானில் சென்ற தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட இத்தகைய பொருள்களின் மதிப்பு ரூ.65 கோடியாக இருந்தது.