காங்டாக்: இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் 23 பேர் உட்பட 43 பேர் திடீரென மாயமாகிவிட்டார்கள்.
அங்கு திடீரென பேய்மழை பெய்தது. அதனால் டீஸ்டா என்ற ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
அந்த வெள்ளத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவர்களைத் தேடி கண்டுபிடிக்க பெரிய அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் கூறியது.
இதன்தொடர்பில் இந்திய ராணுவத்தின் கிழக்குத் தளபத்தியம் புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிக்கிமில் இரவு முழுவதும் மழை பெய்தது. வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் என்ற ஏரி நிரம்பி வழிந்தது. அதனால், டீஸ்டா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்த நிலையில், சுங்தாங் என்ற அணைக்கட்டில் இருந்து அதிக நீர் திடீரென வெளியேறியதால் ஆற்றில் 20 அடி அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.
அப்போது சிங்டாம் என்ற ஊருக்கு அருகே பார்டாங் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராணுவ வாகனங்கள் பாதிக்கப்பட்டன. சில வாகனங்கள் சேற்றில் புதைந்துவிட்டன. 23 வீரர்களை காணவில்லை. அவர்களைத் தேடி மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அறிக்கை தெரிவித்தது.
இந்த ஆறு சிக்கிம், மேற்கு வங்காளம் வழியாக ஓடி பங்ளாதேஷில் நுழைகிறது.
இது பற்றி கருத்து கூறிய சிக்கிம் நிர்வாகம், சிங்டாம் பகுதியில் சிலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களை மீட்பதற்கான பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தது.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங்கைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். அப்போது, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் மோடி உறுதியளித்தார்.