புதுடெல்லி: இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த நான்கு மாநிலங்களில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
நான்கு மாநிலங்களில் ஆறு நாள் பிரசாரத்தில் அவர் எட்டு கூட்டங்களில் பங்கேற்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
நான்கு மாநிலங்களிலும் பிரதமர் மோடி அக்டோபர் 6ஆம் தேதி வரை ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு சனிக்கிழமை சென்ற பிரதமர் மோடி, அங்கு பாஜக.வின் இரண்டு யாத்திரை நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அன்று மதியம் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
இதை முடித்துக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரும் பிரதமர், பஸ்தர் பகுதியில் உள்ள ஜக்தல்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.15 மணியளவில், மகபூப்நகர் மாவட்டத்தில் பிரதமர் மோடி, சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிகழ்ச்சியின் போது, காணொளி மூலம் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஐந்து புதிய கட்டடங்களை பிரதமர் திறந்து வைக்கிறார். ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்; கணிதம் மற்றும் புள்ளியியல் துறை; மேலாண்மை ஆய்வுகள் துறை; விரிவுரை அரங்க வளாகம் - III; மற்றும் சரோஜினி நாயுடு கலை மற்றும் தொடர்பியல் துறை (இணைப்பு) ஆகியவை ஐந்து கட்டடங்களில் அடங்கும்.
அக்டோபர் 3ஆம் தேதி இங்கு திரும்பிவரும் பிரதமர், நிசாமாபாத் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு திங்கள்கிழமை செல்லும் பிரதமர் மோடி, குவாலியர் நகரில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்
அக்டோபர் 6ஆம் தேதி இங்கு திரும்பி வரும் பிரதமர் மோடி ஜோத்பூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி சித்தோர்கர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.